சென்னை :
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஏழை மற்றும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் 2025–2026ம் கல்வியாண்டுக்கான இந்த சேர்க்கை தமிழ்நாட்டில் இதுவரை தொடங்கப்படவில்லை என்று தெரிவித்து, கோவையைச் சேர்ந்த வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் கூறியதாவது:
“கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 25% இடஒதுக்கீட்டுக்கான மாணவர்களின் கல்விச்செலவுகளை மத்திய அரசு 60% வழங்கவேண்டும். மாநில அரசு 40% வழங்கவேண்டும். ஆனால் 2021 முதல் 2023 வரையிலான கல்வியாண்டுகளில், மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. நிதியின் முழுமையான சுமையை தமிழக அரசே தாங்கியுள்ளது.”
இதைக் கேட்ட நீதிபதிகள், “மத்திய அரசு ஏன் கல்வி நிதியை ஒதுக்கவில்லை?” என்று கடுமையாக கேள்வி எழுப்பினர். மத்திய அரசுத் தரப்பு, சில காரணங்களால் நிதி வழங்கப்படவில்லை எனக் கூறியது. ஆனால் அந்த காரணங்கள் என்னவென்று நீதிபதிகள் வினவியபோது, தமிழக அரசுத் தரப்பில், “மத்திய அரசில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்பி கூட இல்லை என்பதே ஒரு முக்கிய காரணம்” என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்திற்கான கல்வி நிதி ஒதுக்கீடு தொடர்பான முழுமையான விவரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.