மரியாதை கூட இல்லையென வைரமுத்து ஆதங்கம் !

சென்னை :
தமிழ் திரையுலகில் பல புகழ்பெற்ற பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் வைரமுத்து, அவரது வரிகளை திரைப்பட தலைப்புகளாக பயன்படுத்தியவர்கள் தன்னிடம் அனுமதியும், மரியாதையும் கூறாமல் மேற்கொண்டதைக் குறிப்பிட்டு தனது சமூக வலைதளத்தில் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

1980-ம் ஆண்டு நிழல்கள் திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த வைரமுத்து, அதன் பின் திரையுலகின் முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார். இவர் எழுதிய பாடல்கள் மட்டுமின்றி, அவரது வரிகள் பல திரைப்பட தலைப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து அவர் தனது சமீபத்திய சமூக வலைதளப் பதிவில்,

“என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு, மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை,” என தெரிவிக்கிறார்.

தொடர்ந்து,

“பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், மெளன ராகம், விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்க மகன் உள்ளிட்ட ஏராளமான படங்கள் எனது வரிகளை தலைப்பாகக் கொண்டுள்ளன. ஆனால், இது குறித்து யாரும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை,” என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலுமொரு ஆதங்கத்துடன்,

“ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகமல்ல. ஆனால், என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Exit mobile version