வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை அதிகாரிகள் இருவர் கையும் களவுமாக கைது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த அபினேஷ் என்பவர் வேளாங்கண்ணி பகுதியில் தங்கும் விடுதி கட்டி வருகிறார். இந்த தங்கும் விடுதிக்கு எதிரே வாய்க்கால் இருப்பதால், விடுதிக்கும் வாய்க்காலுக்கும் நடுவில் பாலம் கட்டுவதற்காக திருவாரூர் நீர்வளத்துறை திட்ட செயலாக்க அலுவலகத்தில் விண்ணப்ப மனு அளித்துள்ளார்.
இதற்கு வென்னாறு வடிநில கோட்டத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல் மற்றும் உதவி பொறியாளர் வினோத் ஆகிய இருவரும் மூன்று லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் அதையும் மீறி லஞ்சம் கேட்டால் உங்கள் அண்ணன் நான் இருக்கிறேன் லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று கூறியதால், லஞ்சம் கேட்கும் நிர்வாகத்துறை அதிகாரிகள் பற்றிய தகவலை அபினேஷ் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி நீர்வளத்துறை அதிகாரிகள் கேட்ட பணத்தை கொடுப்பதற்காக, இன்று அபினேஷ் திருவாரூர் துர்காலயா சாலை பகுதியில் உள்ள வெண்ணாறு வடிநில கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள் மாணிக்கவேல் மற்றும் வினோத் ஆகியோர் அபினேஷ் என்பவரிடம் மூன்று லட்சம் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கையும் களவுமாக இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகளின் சோதனையை அறிந்து செய்தி சேகரிப்பதற்காக வந்த செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமலும், தகவல் தெரிவிக்காமலும், ஒரு மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையை வெளி உலகத்துக்கு கொண்டு செல்லும் செய்தியாளர்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவமரியாதை செய்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.













