மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கத்தின் எட்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பல கலந்து கொண்டு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய மாவட்ட தலைவர் டேவிட் கூறுகையில்: போக்குவரத்து காவல்துறையில் மோட்டார் வாகன விதிமீறல்கள் தொடர்பாக விதிக்கப்படும் அபராதங்களில் குளறுபடிகள் உள்ளது. இந்த குளறுபடி காரணமாக பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தங்களால் தொடர்ந்து இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட முடியாமல் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுகிறது. பழைய இருசக்கர வாகனத்தை ஒரு உரிமையாளரிடமிருந்து ஒரு தொகைக்கு வாங்கும் பட்சத்தில், அதே தொகைக்கு நிகரான அபராத தொகை அந்த வாகனத்தின் மீது போக்குவரத்து காவல்துறையினர் விதித்து உள்ளனர். ஒரு வாகனத்திற்கு அதிகபட்சம் 3 அபராதம் வரை விதிக்கலாம். ஆனால் 10, 15 வரை அபராதம் விதித்து வைத்துள்ளனர். இதனால் பழைய இருசக்கர வாகனங்களின் விலைகே இந்த அபராத தொகையும் இருப்பதால் நாங்கள் தொழில் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அதுமட்டுமின்றி இந்த அபராதம் விதிப்படையில் பல குளறுபடிகள் உள்ளது. நான்கு சக்கர வாகனங்களுக்கு உள்ள விதி மீறல்களை இரு சக்கர வாகனங்களுக்கு விதித்து அபராதம் போட்டுள்ளனர். இது மட்டும் இன்றி விபத்து ஏற்பட்டு, ஓட்ட முடியாத நிலையில் சாலையில் பயன்படுத்தாத சர்வீஸ் நிலையத்தில் மூன்று மாதங்களாக உள்ள வாகனத்திற்கு மாவட்டம் கடந்து வேறு ஒரு பகுதியில் அபராதம் விதித்துள்ளனர். இது போன்ற ஏகப்பட்ட குளறுபடிகள் போக்குவரத்து காவல்துறையினர் விதிக்கும் அபராதம் உள்ளதால், அரசு உடனடியாக இதனை சரி செய்ய வேண்டுமென இருசக்கர வாகன விற்பனையாளர் நல சங்கம் சார்பாக கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

















