தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், விண்ணப்பங்களைச் சரிபார்த்தபோது பல படிவங்களில் முறையான விவரங்கள் பூர்த்தி செய்யப்படாதது கண்டறியப்பட்டது. குறிப்பாக, 2002-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் விவரங்கள், குடும்ப உறுப்பினர்களின் சரியான தரவுகள் மற்றும் உறவுமுறை விவரங்களைச் சரியாகக் குறிப்பிடாத விண்ணப்பங்கள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்தன. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் குறைபாடுகளுடன் விண்ணப்பித்திருந்த 12,572 நபர்களுக்கு, உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, தற்போது அவர்களுக்கான ஆவணச் சரிபார்ப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், போலி வாக்காளர்களை நீக்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நோட்டீஸ் பெற்ற நபர்கள் தாலுகா மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்ட 12 வகையான அரசு அடையாளச் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றின் அசலையும், அதன் நகலையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்களில் இதற்கென அமைக்கப்பட்ட சிறப்பு மையங்களில் நேற்று காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஆவணங்களைச் சமர்ப்பித்தனர்.
மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்தச் சரிபார்ப்புப் பணியின் மூலம், தகுதியான வாக்காளர்கள் எவரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்தச் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்தவுடன், இறுதி வாக்காளர் பட்டியல் முறைப்படி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















