திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் மின்வெட்டு நேரத்தில் நேற்று இரவு இரண்டு கோயில்களின் உண்டியல் உடைத்து திருடு போன சம்பவத்தால் பரபரப்பு. மின்வெட்டை ஏற்படுத்தி தமிழக அரசே திருடர்களுக்கு துணை போவதாக குற்றச்சாட்டு.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த பிறகு தமிழகம் முழுவதும் பரவலாக மின்வெட்டு நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், அம்மையப்பன், கமலாபுரம், கண்கொடுத்தவணிதம், கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், மன்னார்குடி, வலங்கைமான் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு நிலவியது.
இந்த நிலையில் இந்த மின்வெட்டை பயன்படுத்தி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கண்கொடுத்தவணிதம் கிராமத்தில் உள்ள பொது மகா காளியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து திருடப்பட்டுள்ளது. நேற்று மாலை வழக்கம் போல பூஜைகள் முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்ற நிலையில், இன்று காலை கோவிலை திறந்து பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல கொரடாச்சேரி அருகே உள்ள கீழத்திருமதிகுன்னம் பகுதியில் உள்ள கடுகை மாரியம்மன் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு கோவில்களின் உண்டியலிலும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நாணயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
ஒரே நாளில் இரண்டு கோவில்களில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் திருடப்பட்ட சம்பவம் கொரடாச்சேரி சுற்றுவட்டார மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக அரசே மின்வெட்டை ஏற்படுத்தி திருடர்களுக்கு துணை போகிறதா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.













