கீழடி அறிக்கையைச் சுற்றிய சர்ச்சை தொடரும் : அமர்நாத் Vs தொல்லியல் துறை – மத்திய அரசு விளக்கம் வெளியீடு

மதுரை : கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையைச் சுற்றிய சர்ச்சைகள் தொடர்ந்தும் பேசப்படும் நிலையில், இந்திய தொல்லியல் துறை (ASI) மற்றும் அகழாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இடையே நிலவும் கருத்து வேற்றுமைகள் புதிய திருப்பத்தை எடுத்துள்ளன. இதனைத் தொடர்ந்து, மத்திய கலாசாரத்துறை அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மதுரைக்கு அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகளின் அறிக்கைகள் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அவை சில முக்கிய விளக்கங்களை தேவைப்படுத்தும் வகையில், தொல்லியல் துறையால் திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியானது சர்ச்சைக்கு வழிவகுத்தது.

இந்த செய்திகளை “உண்மையற்றவை” எனக் கூறி, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “கீழடி அறிக்கையை வெளியிடுவதில் தொல்லியல் துறை அக்கறை காட்டவில்லை என்பது வெறும் கற்பனை. இது திட்டமிட்டு துறையை தவறாக சித்தரிக்கும் முயற்சி,” எனக் கண்டனம் தெரிவித்துள்ளது.

அறிக்கையில் மேலும், அமர்நாத் ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை ஏற்க மறுத்துள்ளார் என்றும், அவர் தொல்லியல் துறைக்கு அனுப்பிய கடிதத்தில் திருத்தங்கள் தேவையில்லை எனத் தெளிவாக தெரிவித்துள்ளார். அறிக்கைகள் தயாரான பிறகு அவை துறை வல்லுநர்களிடம் அனுப்பி, சோதனை செய்யப்பட்ட பிறகே வெளியிடப்படுவதால், நேரமும், ஆற்றலும், செலவுகளும் முக்கிய காரணியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கீழடி அறிக்கையிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. நிபுணர்கள் பரிந்துரைத்த திருத்தங்களை அகழ்வாராய்ச்சியாளர் மேற்கொள்ளவில்லை” என்றும் கலாசாரத்துறை தெரிவித்துள்ளது. எனினும், அமர்நாத் ராமகிருஷ்ணன் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தனது எக்ஸ் பக்கத்தில்,
“வரலாறென்பது விஸ்வகுருவின் வீட்டுச்சரக்கல்ல! அறிவியல் கண்டுபிடிப்புகளை அதிகாரத்தின் அடிப்படையில் திருத்த முடியாது,” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சில ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அதனைத் துறை கடுமையாக மறுக்கின்றது என்றும் ASI அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், கீழடி அறிக்கையைச் சுற்றிய கருத்து வேறுபாடுகள் தொடரும் சூழல் உருவாகியிருக்கிறது. அகழ்வாராய்ச்சியின் அறிவியல் உண்மைகள் மற்றும் நிரூபணங்களுக்கேற்ற வகையில் இந்த விவகாரம் எப்போது தெளிவடையும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Exit mobile version