தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் நடிகர் விஜய், அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அடுத்தடுத்த நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்தத் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கைச் சிபிஐ (CBI) அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சென்னையில் இருந்த விஜய்யின் நவீன பிரச்சார வாகனத்தை (பேருந்து) சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அந்தப் பிரச்சார வாகனம் தற்போது கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு வாகனத்தின் வடிவமைப்பு, உட்புற வசதிகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது வாகனத்தின் நிலைப்பாடு குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வாகனத்தின் ஓட்டுநரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ அதிகாரப்பூர்வமாக இந்த வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளதால், சட்ட நடைமுறைகளின்படி இனி விஜய் நீதிமன்றத்தை நாடினால் மட்டுமே தனது வாகனத்தைத் திரும்பப் பெற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இந்த வழக்கின் பின்னணியில், ஏற்கனவே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மூத்த ஆலோசகர் அனுஜ் திவாரி தலைமையிலான குழுவினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். நேற்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளும் கரூரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று வாகனப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் வாகனப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால் படத்தின் வெளியீடு முடங்கியுள்ள நிலையில், தற்போது சிபிஐ விசாரணையும் தீவிரமடைந்துள்ளது விஜய்க்கு இரட்டை நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது. கரூரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், அடுத்தகட்டமாக டெல்லி விசாரணையில் கேட்கப்பட வேண்டிய கேள்விகளைத் தயார் செய்து வருவதாகத் தெரிகிறது. விஜய்யின் அரசியல் வருகையை முடக்கும் முயற்சியாக இது இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வரும் வேளையில், 41 உயிரிழப்புகளுக்குக் காரணமான பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிவதே தங்களின் நோக்கம் எனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















