தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் இந்திரா காலனி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுமித்ரா (35). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தற்போது விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். இதற்கிடையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தொடர் கருத்து வேறுபாடு காரணமாக, சுமித்ரா தனது கணவரைப் பிரிந்து தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்தத் தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு, சுமித்ராவுக்கு அப்பகுதியைச் சேர்ந்த சில ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சுமித்ராவின் இந்த நடத்தையினால் ஆத்திரமடைந்த அவரது தம்பி முத்துராஜா (27), தனது அக்காவைக் பலமுறை கண்டித்துள்ளார். குடும்பத்தின் மானம் சந்தியில் சிரிப்பதாகக் கூறி, இந்தத் தவறான உறவுகளைக் கைவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனால், சுமித்ரா தம்பியின் பேச்சைக் கேட்காமல் தனது போக்கிலேயே தொடர்ந்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, புளியங்குளத்தில் இருந்த வீட்டை காலி செய்த சுமித்ரா, செய்தியநல்லூர் ரயில் நிலையம் அருகே ஒரு வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். அங்கு சென்றும் அவர் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு சுமித்ராவின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த இருவர், அவரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் சுமித்ரா அலறுவதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, அவர் துடிதுடித்துக் கொண்டிருந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சுமித்ராவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையாளிகளைத் தேடி வந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் சுமித்ராவின் தம்பி முத்துராஜாவை பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், முத்துராஜா உண்மையை ஒப்புக்கொண்டார். “எனது அக்கா பலருடன் தொடர்பில் இருந்ததால் ஊருக்குள் தலை காட்ட முடியவில்லை. குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றவே அவரை வெட்டிக் கொலை செய்தேன்” என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, கொலையில் முத்துராஜாவுக்கு உதவியாக இருந்த அவரது நண்பர் வசந்த் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான முத்துராஜா மற்றும் வசந்த் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். உடன் பிறந்த அக்காவையே தம்பியே வெட்டிக் கொலை செய்த இந்தச் சம்பவம் செய்தியநல்லூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













