பாடப்புத்தகங்கள் மாணவர்கள் நாட்டுப்பணிக்கு உதவும் வகையில் உருவாக வேண்டும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

சென்னை :
அடுத்த தலைமுறையினருக்கு தேவையான திறன்களை அளித்து, அவர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் ஈடுபடுமாறு உருவாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை மற்றும் பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “இந்தியாவின் வளர்ச்சிக்கும், குறிப்பாக தமிழக மக்களின் பாரம்பரிய குணங்களான விருந்தோம்பல், தன்னலமற்ற மனப்பான்மை, மற்றவர்களை மதிக்கும் பண்பு போன்றவை குழந்தைகள் முதல் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த மதிப்புகளைப் பாடத்திட்டத்தில் கதை வடிவில் சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன,” என்றார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் மாணவர்களுக்கு எந்த திறன்கள் தேவையானவை, அவர்களை இந்தியாவின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கத் தயார்படுத்த எப்படி பாடத்திட்டம் அமைக்க வேண்டும் என்பதற்காக நிபுணர்களுடன் விரிவான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

“கல்வியின் அடித்தளம் பலமாக இருக்க வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை மாணவர்களின் அறிவாற்றலையும், ஆளுமை வளர்ச்சியையும் ஒரே நேரத்தில் மேம்படுத்தும் வகையில் பாடத்திட்ட மாற்றங்கள் அவசியம். இந்தியா 2047க்குள் முன்னேற்ற நாடாக மாற வேண்டும் என்ற நோக்கில் பல துறைகள் இணைந்து பணிபுரிகின்றன,” எனவும் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைகளில் கல்வியியல் நிபுணர்கள், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று வருவதால், இறுதியாக உருவாகும் பாடத்திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version