விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த வடகரை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஜூன் 11) காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியை அடுத்த வடகரையில் செயல்பட்டு வரும் பட்டாசு தயாரிப்பு நிறுவனத்தில், வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு, ஆலைக்குள் இருந்த ஒரு அறை இடிந்து தரைமட்டமானதாக மாறியது.
தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புப் படையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர். விபத்தில் மூவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும் மூவருக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் அடையாளம் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு ஆலையில் நடந்த இந்த விபத்து, பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.