தமிழகத்தில் நிலவி வரும் வானிலை மாற்றங்கள் காரணமாக இன்று முதல் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லட்சத்தீவு, கேரளா மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு ஆகியவையே இந்தத் திடீர் மழை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, இன்று (பிப். 1) தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 2-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 3-ஆம் தேதி கடலோர மாவட்டங்களிலும் மேகமூட்டத்துடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாகப் பிப்ரவரி 4-ஆம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும், 5-ஆம் தேதி ஓரிரு இடங்களிலும், 6-ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பனிமூட்டத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதேபோல் ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். வரும் பிப்ரவரி 2, 3 மற்றும் 4-ஆம் தேதிகளிலும் வட மாவட்டங்களில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டத்தின் தாக்கம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக்கூடும். கடந்த 24 மணி நேர நிலவரப்படி, சமவெளிப் பகுதியில் திருத்தணியில் 16.5 டிகிரி செல்சியஸும், மலைப் பகுதியான ஊட்டியில் மிகக் குறைந்த அளவாக 6.4 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்தத் திடீர் வானிலை மாற்றங்களால் காலை நேரப் பயணங்களில் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.














