திருவள்ளூரில் கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு பயிலரங்கத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு பயிலரங்கம் கால்நடை பராமரிப்புத்துறை திருவள்ளூர் மண்டல இணை இயக்குநர் ஜெயந்தி தலைமையில் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பில் புதிய மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் குறித்தும், பால், இறைச்சி, தீவனம் உள்ளிட்டவைகளை பதப்படுத்துதல் குறித்தும், கோடைகாலத்தில் கால்நடைகளை பராமரிப்பது குறித்தும், நுகர்வோருக்கு தரமான உணவுப்பொருட்கள் வழங்குதல், ஊட்டச்சத்து குறைபாட்டை தடுத்தல், ஏற்றுமதியை ஊக்குவித்தல், கால்நடைகளுக்கான தரமான தீவனம் வழங்குதல், கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெறுவதை குறித்தும், ahidf.udyamimitra.in என்ற இணையதளத்தின் மூலமாக தகுதியானவர்கள் விரிவான திட்ட அறிக்கையுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது குறித்தும், தொழில்முனைவோர் ஆக வேண்டிய வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கால்நடை வளர்ப்பு விவசாயிகள் 200 க்கும் மேற்பட்ட கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.













