திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில், பல மாதங்களாக இழுத்தடிக்கப்படும் வில்லங்கச் சான்று விவகாரத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் பல ஆண்டுகளாகப் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களுடன் இயங்கி வருகிறது. குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளாக இங்கு நிரந்தரமான சார்பதிவாளர் நியமிக்கப்படவில்லை. வெவ்வேறு ஊர்களில் பணிபுரிபவர்களே இங்கு ‘கூடுதல் பொறுப்பு’ அல்லது ‘மாற்றுப் பணியாக’ வாரத்தில் சில நாட்கள் மட்டும் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக, பொதுமக்களின் பத்திரப்பதிவு தொடர்பான பணிகளும், வில்லங்கச் சான்று (EC) பெறுவதும் மாதக்கணக்கில், ஏன் சில நேரங்களில் ஆண்டுக்கணக்கிலும் கிடப்பில் போடப்படுகின்றன. சான்றிதழ் கிடைக்காததால் வங்கிக் கடன் பெறுபவர்கள் மற்றும் நில விற்பனை செய்பவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், பல மாதங்களாகச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் காத்துக் கிடக்க, அண்மையில் செல்வாக்கு மிக்க ஒருவருக்கு மட்டும் விடுமுறை நாளில் அலுவலகத்தைத் திறந்து வில்லங்கச் சான்று வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்தத் தகவல் அறிந்து ஆவேசமடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நேற்று வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், அங்கிருந்த பொறுப்புச் சார்பதிவாளர் ராமச்சந்திரனிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், நீண்ட நாட்களாகக் காத்திருந்த மூர்த்தி என்பவர், தனது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதனால் அலுவலக வளாகமே போர்க்களமாக மாறியது. அங்கிருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த வடமதுரை காவல்துறையினர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுத் துறையில் டிஜிட்டல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், வடமதுரை போன்ற அலுவலகங்களில் நிரந்தர அதிகாரிகளின்றி பொதுமக்கள் அவதிப்படுவது தொடர்கதையாகி வருகிறது. “15 ஆண்டு காலப் பிரச்சினைக்கு அரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கும்?” என்பதே இப்பகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.
















