சென்னை:
மத்திய அரசு கொண்டுவரும், ஏழைகள் மீது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கொள்கைகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்து பின்னரே முடிவுகளை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தங்க நகைக்கடன்கள் குறித்த வரைவு வழிகாட்டுதல்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியிருந்த கடிதத்தில் முன்வைத்திருந்த கேள்விகளுக்கு நிதியமைச்சகம் பதிலளித்துள்ளது என்பது மகிழ்ச்சியானது,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகள் மற்றும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள் போன்ற சிறிய அளவில் கடன் வாங்குபவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் எளிதாக கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இத்துடன், ஏழைகள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த கொள்கையும் அமல்படுத்தும் முன், அந்த கொள்கை மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்யப்பட்ட பிறகே முடிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.