கடந்த ஆண்டின் ஐபிஎல் முழுவதும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கீழ் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் முடித்தது.இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி மீது யாருக்குமே எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருந்தது.எப்போதும் போல இந்த சீசனிலும் வந்து விளையாடிவிட்டு சென்றுவிடுவார்கள் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது. ஒரு கிரிக்கெட் வல்லுநர்கள் கூட குஜராத் டைட்டன்ஸ் அணி மீது பிளேஆஃப் செல்லும் என்ற நம்பிக்கையை வைக்கவே இல்லை.
2025 தொடர் முழுவதும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறையிலும் பிரமாதமாக செயல்பட்டுவரும் டைட்டன்ஸ் அணி, 8 போட்டிகளில் 6-ல் வென்று பிளேஆஃப் செல்வதற்கான ரேஸில் முதல் அணியாக முந்தியுள்ளது.
இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே என ஆச்சரியப்படவைக்கும் வகையில்,வீரர்களான சுப்மன்கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் சிக்ஸ் ஹிட்டிங் வீரர்களாக இல்லாத போதிலும் இரண்டு 100 ரன்கள் மற்றும் இரண்டு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் என அடித்து மிரட்டிவருகின்றனர்.அது எப்படிங்க ஒருத்தரால எல்லா மேட்ச்சும் அடிக்க முடியும்’ என்பது போல 8 போட்டிகளில் 52 சராசரியுடன் 417 ரன்களை குவித்திருக்கும் சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி மிரட்டிவருகிறார்.
இவர்கள் தான் ஒருபுறம் என்றால் 3வது வீரராக களமிறங்கும் ஜோஸ் பட்லர் ‘இந்த ஆட்டத்தை சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்துக்கு கூட ஆடலேயே’ என மிரட்டிவருகிறார். பந்துவீச்சில் காற்றில் பந்தின் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கும் முகமது சிராஜ் புதிய பந்தில் ஸ்டம்புகளை பறக்கவிட்டு தான்ஒரு உலகத்தரம் வாய்ந்த பவுலர் என்பதை நிரூபித்துவருகிறார். பிரசித் கிருஷ்ணா மிடில் ஓவரில் விக்கெட் வேட்டை நடத்தி பர்ப்பிள் கேப்பை கைப்பற்ற, ரன்னை விட்டுக்கொடுக்காமல் கண்டண்ட் செய்வதில் சாய் கிஷோர் அசத்திவருகிறார். போதாக்குறைக்கு தற்போது ரஷீத் கானும் ஃபார்மிற்கு திரும்பியிருக்கும் நிலையில் ‘யாராலுமே அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாத ஒரு அணியாக உருமாறி நிற்கிறது’ குஜராத் டைட்டன்ஸ் அணி.

சுப்மன் கில் குவித்த 90 ரன்கள்..
இன்றைய பரபரப்பான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொண்டு விளையாடியது குஜராத் அணி.
ரன்சேஸிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் ஆரம்பத்தில் நிதானமாகவே தொடங்கினர். ஆனால் முதலில் பவுண்டரிகளை விரட்டிய சாய் சுதர்சன் அதிரடி பேட்டிங்கிற்கு பிள்ளையார் சுழி போட, அதற்குபிறகு சிக்சர் பவுண்டரி என நாலாபுறமும் சிதறடித்த சுப்மன் கில் மிரட்டிவிட்டார்.
விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அடுத்தடுத்து அரைசதமடித்து அசத்த 11 ஓவருக்கு 104 ரன்களை எடுத்துவந்தது டைட்டன்ஸ் அணி. 6 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய சாய் சுதர்சன் 52 ரன்னில் வெளியேற, தொடர்ந்து 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய சுப்மன் கில் 90 ரன்கள் அடித்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு வெளியேறினார்.
தொடர்ந்துவந்த ஜோஸ் பட்லர் ரஸ்ஸெல்லுக்கு எதிராக ஹாட்ரிக் பவுண்டரிகளை விரட்டி அசத்தினார். 8 பவுண்டரிகளை அடுத்தடுத்து பறக்கவிட்ட பட்லர் 43 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 198 ரன்களை குவித்தது குஜராத் அணி
199 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, முதல் ஓவரிலேயே குர்பாஸை 1 ரன்னில் அவுட்டாக்கிய முகமது சிராஜ் அதிர்ச்சி கொடுத்தார். விரைவாகவே விக்கெட்டை இழந்தாலும் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் அஜிங்கியா ரஹானே மற்றும் சுனில் நரைன் இருவரும் அணியை மீட்டு எடுத்துவர போராடினர்.
தேவையான நேரத்தில் பவுண்டரிகளை எடுத்துவந்து ரதிமை இழக்காமல் தரமான கிரிக்கெட் ஷாட்களை விளையாடினர் ரஹானே. பொறுத்தது போதுமென 2 பவுண்டரிகள் 1 சிக்சரை சுனில் நரைன் பறக்கவிட, அவரை வெளியேற்றவே ஒரு ஃபீல்டரை நிறுத்துவைத்து பந்துவீசிய ரஷீத் கான் நரைனை 17 ரன்னில் வெளியேற்றினார்.
ஒரேயொரு நம்பிக்கையாக இருந்த கேப்டன் ரஹானேவும் வெளியேற, அடுத்து களத்திற்கு வந்த வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸெல் அனைவரும் ஏமாற்றினர். 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என ரஸ்ஸெல் அடித்தாலும் அவரால் தேவையான பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. இறுதியாக இம்பேக்ட் வீரராக வந்த ரகுவன்சி 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி இண்டண்ட் காமித்தாலும் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே அடித்த கொல்கத்தா அணி படுதோல்வியை சந்தித்தது.
39 ரன்னில் அபாரமான வெற்றியை பதிவுசெய்த டைட்டன்ஸ் அணி 8 போட்டியில் ஆறாவது வெற்றியை ருசித்தது. மீதமிருக்கும் 6 போட்டியில் 3 அல்லது 2 போட்டியில் வெற்றிபெற்றாலே பிளேஆஃப்க்கு தகுதிபெற்றுவிடும் என்பதால் குஜராத் அணி கிட்டத்தட்ட முதல் அணியாக பிளேஆஃப் தகுதியை நெருங்கிவிட்டது.
தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ’சின்ன பசங்க என்ன பண்ணிட போறாங்க’ என நினைக்கப்பட்ட ஒரு அணி சாம்பியன்கள் இருக்கும் அணிகளின் கண்களிலேயே கண்ணீரை வரவழைத்து வருகிறது.