பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பின்னர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
புதுடில்லி: இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் தாக்கம் விமான போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 10ம் தேதி வரை, நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 18 முக்கிய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டது. இதில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வசமான காஷ்மீர் பகுதியில் நுழைந்து, 9 பயங்கரவாத முகாம்களை அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் பின்னணி காரணமாக, இந்தியா முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 244 இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்பட்டதோடு, விமான நிலையங்களிலும் விழிப்புடன் செயல்பட ஆணையிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஸ்ரீநகர், லே, அமிர்தசரஸ், சண்டிகர், ஜம்மு, பதன்கோட், ஜோத்பூர், ஜெய்சால்மர், ஷிம்லா, தரம்ஷாலா உள்ளிட்ட 18 விமான நிலையங்களில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகளும், பொதுமக்களும் அவசியமில்லாத பயணங்களை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.