மயிலாடுதுறையில் ஆம்னி வேன் திடீரென தீப்பற்றி எரிந்து சேதம் சாலை முழுவதும் புகைமண்டலமானதால் போக்குவரத்து பாதிப்பு ; தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயணைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் அருகே உள்ள அடியாமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் ஆம்னி வேனை, மயிலாடுதுறை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் இன்று காலை ஆம்னி வேனில் தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு அடியாமங்கலம் பாக்கியராஜ் வீட்டுக்கு சென்று விட்டுவிட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது மயிலாடுதுறை கலைஞர் நகர் பகுதியில் அருகில் வரும் பொழுது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வந்தபோது, ஆம்னி வேன் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை கவனித்த ஓட்டுநர் ரஞ்சித்குமார் உடனடியாக வாகனத்தில் இருந்து இறங்கி, அருகிலிருந்த கலைஞர் நகர் பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முற்பட்டார். ஆனால் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்து வேன் முழுவதும் தீக்கிரையாகியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும், அதற்குள் வேன் முழுவதும் எரிந்தது. இந்த சம்பவத்தின் போது வேனில் யாரும் இல்லாததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆம்னி வேனில் ஒயர் பிரச்சனை ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக ஓட்டுனர் ரஞ்சித் குமார் தெரிவித்தார். சாலை முழுவதும் புகைமண்டலமானதால் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.













