சென்னை :
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், திருப்போரூர் அருகே ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்தேக்கம் அமைக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் துறையில் அனுமதிக்காக விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், பகிங்ஹாம் கால்வாய் அருகே கோவளத்தில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைக்கு இடையில் அமைக்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசிற்கு சொந்தமான 4,735 ஏக்கர் நிலம் பயன்பாட்டில் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலங்கள் கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர், நெம்மேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ளவை.
வெள்ளநீர் சேமிப்பு :
வடகிழக்கு பருவமழைக் காலங்களில், சிறுதாவூர், தையூர், மணவேடு உள்ளிட்ட 69 ஏரிகளில் இருந்து வெள்ளப்பொழிவு நீர் பகிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் 2.97 டி.எம்.சி.க்கும் மேல் நீர் வீணாகி வருகிறது. இந்த நீரில் 1.60 டி.எம்.சி. நீரை சேமிக்கக்கூடிய திறனுடன் புதிய நீர்தேக்கம் அமைக்கப்படுகிறது.
விநியோகம் மற்றும் பயன்பாடு :
சுத்திகரிக்கப்பட்ட நீர் சோழிங்கநல்லூர், நாவலூர், மேடவாக்கம், பள்ளிக்கரை, சிறுசேரி, கேளம்பாக்கம் மற்றும் மாமல்லபுரம் வரை உள்ள பகுதிகளுக்கு குடிநீராக விநியோகம் செய்யப்படும். நீர்தேக்கத்தை சுற்றி சுற்றுச்சூழல் பூங்காவும் உருவாக்கப்படும்.
திட்ட முன்னேற்றம் :
சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பம் தற்போது பரிசீலனையில் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன், திட்டத்தின் அடுத்த கட்ட பணிகள் துவங்க தயாராகி வருகிறது நீர்வளத்துறை.