மகாராஷ்டிரா : புறநகர் ரயிலிலிருந்து விழுந்த பயணிகள் – 5 பேர் உயிரிழப்பு, பலர் காயம் !

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே உள்ள புறநகர் ரயிலில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (ஜூன் 9, 2025) காலை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸிலிருந்து தானேவின் கசாரா பகுதிக்குச் சென்றிருந்த உள்ளூர் ரயிலில் இந்த விபத்து நிகழ்ந்தது. வேலைக்குச் செல்லும் நேரமாக இருந்ததால் ரயிலில் பயணிக்க விரைந்த ஏராளமானோர், கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் பயணித்துள்ளனர்.

இதனால், கதவுகளில் தொங்கியபடி பயணித்த சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் குறைந்தது 10 முதல் 12 பேர் வரை கீழே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 5 பேர் உயிரிழந்தனர்; பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்ததும், ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version