சென்னை : “கொடூர திமுக ஆட்சியில், கொங்கு மண்டலமே கொலைக்களத் தலைநகராக மாறியுள்ளது” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
“நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டியில் தோட்டத்து வீடு ஒன்றில் வசித்த மூதாட்டி சாமியாத்தாள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மனதைக் கலங்க வைக்கிறது. திமுக ஆட்சியில் கொங்கு மாவட்டங்களில், தோட்ட வீடுகளில் வசிக்கும் முதியவர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் படுகொலைகள், அன்றாட நிகழ்வாகிவிட்டது என்பது மிகக் கொடுமையான விஷயம்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம், ஈரோடு மாவட்டம் சிவகிரி, தற்போது நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி என ஒரே மாதிரியான கொலைகள் தொடர்ச்சியாக நடைபெறுவதும், அவற்றை தடுக்க முடியாத நிலை காவல்துறையின் செயலற்ற தன்மையை எடுத்துக் காட்டுகிறது.
மக்கள், குறிப்பாக முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் யாரும் வீடுகளில்கூட பாதுகாப்பாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சட்ட ஒழுங்கு சீரழிவின் மிக மோசமான நிலையை காட்டுகிறது. திமுக ஆட்சியில் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது.
மீதமிருக்கும் ஓராண்டு ஆட்சிக் காலத்தில், இன்னும் எத்தனை கொடூரக் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் நிகழப்போகின்றனவோ என நினைக்கும் போதே மனம் பதறுகிறது. திமுக ஆட்சியின் கீழ் மக்கள் ரத்த வெள்ளத்தில் மிதக்கும் நிலை உருவாகியுள்ளது.
கொலைவெறி அரசியலுக்குப் பதிலாக மக்கள் நலனில் அக்கறை கொண்ட நல்லாட்சியை உருவாக்குவதே ஒரே தீர்வாகும். தமிழக மக்களை மீட்பதற்கான ஒரே வழி, இந்த கொடூர ஆட்சியை மாற்றுவதுதான்,” என அவர் கூறினார்.