திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்களாந்தபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்டகாலமாக வசித்து வருகின்றன. இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாத காரணத்தினால், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி பொதுமக்கள் நடமாடவே முடியாத அவலநிலை நீடித்து வந்தது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஸ்டாலின் குமாரிடம் நேரில் சந்தித்து, தங்கள் பகுதியின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை மனு அளித்தனர். பொதுமக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த எம்.எல்.ஏ, உடனடியாகத் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, தனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவிற்குத் தலைமை தாங்கிய சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், பணிகளைத் தொடங்கி வைத்து, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தரமான முறையில் சாலையை அமைத்து முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் தர்மன் ராஜேந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் குழு துணை அமைப்பாளர் சுப்ரமணி, வழக்கறிஞர் கண்ணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்து கொண்டனர். பல ஆண்டுகாலமாகப் போராடிப் பெற்ற இந்த சாலை வசதியால், இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
