புதுடில்லி : 180 பயணிகளுடன் லே நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டில்லியில் இன்று (ஜூன் 19) அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்தோவின் 6இ 2006 என்ற விமானம், புதுடில்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரின் லே நகருக்கு இன்று காலை புறப்பட்டது. விமானம் லே விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தை டில்லி விமான நிலையத்துக்கு மீண்டும் திருப்பி அனுப்பி அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த 180 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவசர தரையிறக்கத்துக்குப் பின்னர், விமானம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்காக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் ஆகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல விமானங்கள் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தரையிறக்கப்படுவது, விமான பயணிகள் மத்தியில் கவலையையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.