புதுடெல்லி :
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் முக்கிய ராணுவ மற்றும் விமானப்படை தளங்களை இந்தியா தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் நூர் கான், ரபிக்கி, முரித், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர், சுனியான் உள்ளிட்ட விமானப்படை தளங்கள் மற்றும் பஸ்ரூர் ரேடார் நிலையம், சியால்கோட் விமான தளம் ஆகியவை இலக்காகக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்தத் தளங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து விமானப்படை கமாண்டர் வியோமிகா சிங் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது :
“பாகிஸ்தான் தொடர்ந்து டுரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. இந்தியா இதனை முறியடித்ததுடன், எதிர்வினையாக இந்த தாக்குதலை நடத்தியது. முக்கிய ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தானின் நீண்ட தூர தாக்குதல்திறன் மற்றும் வான் உளவு செயல்பாடுகள் பாதிக்கப்படும் வகையில் இந்தியா தன்னுடைய தாக்குதலை திட்டமிட்டுள்ளது” என்றார்.
இந்தியா இலக்குகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டதாகவும், எதிரிகளின் விமானங்கள் மற்றும் டுரோன்களை முற்றிலும் முடக்குவதே இத்தாக்குதலின் நோக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் தொடர்ந்த தாக்குதல்களுக்கு இது ஒரு கடும் எச்சரிக்கையாகவும், எதிர்காலத்தில் பயங்கரவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம் என்பதையும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.