நடராஜபுரம் கிராமத்தில் யோகாசனத்தில் உலக சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ-மாணவிகள் ஆசனங்களில் அரைமணி நேரம் நின்று சாதனை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நடராஜபுரம் கிராமத்தில் உள்ள கனகா அரசு உதவி பெறும் பள்ளியில் யோகாசனத்தில் மாணவ மாணவிகள் நிகழ்த்திய உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 34 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு, வஜ்ராசனம், சிரசாசனம், ஹாலாசனம், பத்ம பத்மாசனம், பஜ்ஜி மோத்தாசனம், சர்வங்காசனம், பத்ம சர்வங்காசனம் ஆகிய ஆசனங்களில் அரை மணி நேரம் ஒரேநிலையில், அசையாமல் யோகாசனம் செய்தனர். யோகா வேர்ல்ட் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட் என்ற அமைப்பு இதனை உலக சாதனையாக அங்கீகரித்தது. பள்ளி தாளாளர் வசந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வேர்ல்ட் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ்குமார் கலந்து கொண்டு சாதனை மாணவிகள் மற்றும் யோகா பயிற்றுநர் ரம்யா ஆகியோருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் விருதினை வழங்கி பாராட்டினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை பொற்செல்வி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version