கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இடையே ஆட்சிப் பகிர்வு மோதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
கடந்த 2023 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றதும், முதலமைச்சர் யார் என்பதில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்தது. இருதரப்பையும் அழைத்துப் பேசிய டெல்லி காங்கிரஸ் தலைமை, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக இருப்பது என்றும், கடைசி இரண்டரை ஆண்டுகள் டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்குவது என்றும் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் அமைந்து இரண்டரை ஆண்டுகள் இந்த மாதத்துடன் முடிகிறது. எனவே, டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதனை சித்தராமையா மறைமுகமாக மறுத்தும் வந்தார்.
இந்நிலையில், டி.கே.சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏ-கள் டெல்லி சென்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை அவர்கள் சந்தித்து, டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கும்படி கோரிக்கை வைக்க உள்ளனர். இதனால் கர்நாடக காங்கிரஸில் பரபரப்பு தொற்றியுள்ளது.













