மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறை முன்பு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய திடீர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே முழுமையாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அருள்பெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் இளவசரன் உள்ளிட்டோர் பேசினர்.
தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் மருத்துவச் செலவுத் தொகை வழங்குவதில் தாமதம் மற்றும் முறைகேடுகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தைப் போல மாநில அரசே தனி நிதியம் அமைத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவச் செலவுகளை நேரடியாக ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறை வரை கண்டன முழக்கங்களை எழுப்பியவாறே மாடிப்பகுதிக்குச சென்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது, மீட்டிங் முடிந்து வந்த மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுவை அளித்து பின்னர் கலைந்து சென்றனர்.














