ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் : சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவி தொடர்பான பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது கடந்த ஜனவரி மாதம் கொள்கைதவிர்க்கும் நடவடிக்கையாக சென்னை மாநகர காவல் துறை குண்டர் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக அவரது தாய் கங்காதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், 2024 டிசம்பர் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை முன்னிறுத்தி, அவரது மகனை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்காக 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பழைய வழக்குகளை காரணமாக காட்டியதாகவும், இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டிய நடைமுறைகள் காவல்துறையால் பின்பற்றப்படவில்லை என்றும், அழுத்தத்திற்கு உட்பட்டு அவர் மகனை சட்ட விரோதமாக சிறையில் அடைத்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஞானசேகரனை உடனடியாக விடுவித்து, அவரது மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தையும் ரத்து செய்யக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ் மற்றும் வி. லக்ஷ்மிநாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் “இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு விட்டது” என்று கூறப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் வழக்கை மேலும் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்

Exit mobile version