சென்னை: மதுரை நகரின் போக்குவரத்து நெரிசல் மற்றும் கோரிப்பாளையம் பாலம் பணிகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கேள்விக்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்த போது சட்டசபையில் களகலப்பு ஏற்பட்டது.
செல்லூர் ராஜு பேசியதில், “மதுரை மாநகரில் இரண்டு முக்கிய பாலப் பணிகள் எப்போது முடியும்? மக்கள் போக்குவரத்தில் சிரமப்படுகிறார்கள், எப்போது வழி சுலபமாக இருக்கும்?” என்ற கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த எ.வ.வேலு, “மதுரை பகுதிக்கு முதன்மை அளித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீட்டு அருகே சென்றபோது அவர் பங்களாவில் இருந்ததால் நேரில் சந்திக்க முடியவில்லை. கோரிப்பாளையம் பகுதியில் பாலம் அமைப்பதில் பழைய தடைகள் இருந்தாலும், தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரிக்குள் அந்த பாலம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை அருகே உள்ள பாலமும் நவம்பருக்குள் திறக்கப்படும். மேலும், மதுரை மேற்கு தொகுதியில் மற்றொரு பாலமும் கட்டிவருகிறோம். இந்த பணிகள் முடிவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்” என்று அவர் தெரிவித்தார்.
சட்டசபையில் நடைபெற்ற இந்த உரையாடல் உறுப்பினர்களுக்கு சிரிப்பையும், கவனத்தையும் உருவாக்கியது.