இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் போக்குவரத்து நெரிசலும், விதிமீறல்களால் ஏற்படும் விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில், போக்குவரத்து காவல்துறையின் செயல்முறைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பொதுமக்களிடையே “அவசரமா இருந்தாலும் பாதியில் நிறுத்தி அபராதம் போடுறாங்க!” என்ற புகார்கள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனை மனதில் கொண்டு, சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. அருண் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அனுமதியில்லாமல் காவல்துறையினர் சாலைகளில் குழுக்களாக நின்று, ஏதேனும் காரணமின்றி வாகன ஓட்டுநர்களிடம் அபராதம் வசூலிக்கும் நடைமுறை இனிமேல் தடை செய்யப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, பின்வரும் ஐந்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும்:
- அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல்
- ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தல்
- ஒன்வேயில் செல்லுதல்
- குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்
- இருசக்கர வாகனத்தில் இருவருக்கும் மேற்பட்டோர் பயணித்தல்
இந்த புதிய கட்டுப்பாடுகள், காவல்துறையின் அதிகார பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு நியாயமான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்திலும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தும் ஒரு விதிமுறை சீர்திருத்தமாக பார்க்கப்படுகிறது. மேலும், இது போக்குவரத்து நெரிசலையும் மற்றும் அவசியமற்ற தாமதங்களையும் குறைக்கும் என நம்பப்படுகிறது.