முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகத் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் மீது திமுக சார்பில் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த திமுக ஐடி அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் முரளிகிருஷ்ணன் இந்த புகாரை பதிவு செய்துள்ளார்.
அவரின் புகாரில், “செப்டம்பர் 20-ம் தேதி நாகை மற்றும் திருவாரூரில் நடந்த பிரசார கூட்டங்களில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தாரை நோக்கி விஜய் தவறான குற்றச்சாட்டுகளையும், அவதூறான மற்றும் ஆபாசமான சொற்களையும் பயன்படுத்தினார். கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசியுள்ளார். இதுகுறித்து மணப்பாறை போலீசில் முறையிட்டும், அவர்கள் புகாரை ஏற்கவில்லை. எனவே தற்போது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கிறேன். விஜய் மீது உரிய விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பேரில், விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் முரளிகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.













