நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நாட்டு நலப்பணித் திட்டத்துடன் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் கலை விழாவில், மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி நாட்டுப்புற நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள சுந்தரனார் அரங்கத்தில் இந்த மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் கலை விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் வழிகாட்டுதலின்படி நடந்த இந்த விழாவிற்கு, பல்கலைக்கழகப் பதிவாளர் சாக்ரட்டீஸ் தலைமை தாங்கினார்.
விழாவில் தலைமை தாங்கிப் பேசிய பதிவாளர் சாக்ரட்டீஸ், “இன்றைய இளைஞர்கள் தங்களது தனித்திறமைகளை கலை நிகழ்ச்சிகள் வாயிலாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் லெனின், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் ஆகியோர் பேசினர். விழாவையொட்டி மாணவர்களின் கலை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாகப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன: நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறப் பாடல், பேச்சுப்போட்டி, கவிதை, கதை எழுதல், ஓவியப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கல்லூரி மாணவர்கள் நாட்டுப்புற நடனமாடி அனைவரையும் அசத்தினர்.
நெல்லை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்போட்டிகளில் சிறந்து விளங்கி வெற்றி பெற்றவர்கள், அடுத்து நடைபெறவிருக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். இறுதியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜாஸ்மின் சுதா நன்றி கூறினார்.

















