பழ.கருப்பையா மீது இயக்குநர் கரு.பழனியப்பன் சாதி வன்கொடுமை புகார்

சிவகங்கை : மூத்த அரசியல் தலைவர் பழ.கருப்பையா தனது குடும்பத்தினரிடம் சாதி அடிப்படையில் வன்கொடுமை செய்ததாக அவரது தம்பி மகனும், திரைப்பட இயக்குநருமான கரு.பழனியப்பன் பரபரப்பான புகார் ஒன்றை காரைக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், “2004 ஆம் ஆண்டு என் விருப்பப்படி வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன். என் பெற்றோர் சம்மதித்தாலும், குடும்ப மூத்தவர் பழ.கருப்பையா கடுமையாக எதிர்த்தார். அதை மீறினால் குடும்பமும், சுற்றத்தார்களும் என்னை தனிமைப்படுத்திவிடுவர் என மிரட்டினார்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “திருமணத்திற்கு பிறகும் கடந்த 21 ஆண்டுகளாக எந்த ஒரு குடும்ப நிகழ்ச்சிகளிலும் என்னை புறக்கணிக்க பழ.கருப்பையா அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். அவரை மீறி யாராவது என்னை அழைத்தால், அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என ஏளனம் செய்து, என்னை தொடர்ந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்” என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், காரைக்குடியில் உள்ள பூர்வீக வீட்டில் பராமரிப்பு வேலைகளையும் தனது பங்குதாரரான பழ.கருப்பையா தடுக்கிறார் என்றும், “அந்த வீட்டில் நான் புழங்கக் கூடாது என்பதே நோக்கம்” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“சாதி அடிப்படையில் எனது திருமணத்திற்கும், எனது வாழ்விற்கும் எதிராக 21 ஆண்டுகளாக தொடர்ந்து வன்முறை நடத்தப்பட்டு வருகிறது. எனவே அவரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என காவல்துறையிடம் கரு.பழனியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதே சமயத்தில், பழ.கருப்பையா கடந்த காலத்தில் தன்னுடைய தம்பி வீட்டை சேதப்படுத்தியதாகவே போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் விளக்கமாக சென்ற இயக்குநர் கரு.பழனியப்பன், இப்போது நேரடியாக தனது பெரியப்பா மீது சாதி வன்கொடுமை புகார் பதிவு செய்திருக்கிறார்.

Exit mobile version