சென்னை:
ஐபிஎல் 2025 சீசனில் தொடர்ந்து தோல்வி சந்தித்துவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று ஹைதராபாத் அணியை எதிர்த்து வாழ்க்கை மரணப் போட்டியில் மோதியது. ஏற்கனவே 6 போட்டிகளில் தோல்வி கண்டுள்ள சிஎஸ்கே, பவர் பிளே பகுதியில் நிலையான தொடக்கம் இல்லை என்பது ரசிகர்களின் விமர்சனமாக அமைந்தது.
புதிய முயற்சியாக ரச்சின் ரவீந்திராவை நீக்கி, இளம் வீரர்கள் ஷேக் ரசித் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறக்கப்பட்டனர். இதில் ரசித், முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆக வெளியேற, அதிர்ச்சியில் சிஎஸ்கே குழப்பமடைந்தது.
விரைவில் ஷாம் கரன் களமிறங்கிய நிலையில், 17 வயதான ஆயுஷ் மாத்ரே தான் போட்டியின் ஹைலைடாக மாறினார். எதிரணி பவுலர்களின் அழுத்தத்தையும் மீறி, பவர் பிளேவில் ஆறு பவுண்டரிகளை அடித்து தன்னுடைய திறமையை நிரூபித்தார். 19 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்த அவர், சற்றே தாமதமாக விளையாடிய கரனுடன் (10 பந்துகளில் 9 ரன்கள்) இணைந்து முக்கிய பங்கு வகித்தார்.
பவர் பிளே முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புடன் சிஎஸ்கே 50 ரன்களைப் பெற்றது. இதையடுத்து, தென்னாப்பிரிக்க இளைஞரான டெவால்ட் ப்ரவீஸ் தனது டெப்யூ போட்டியில் களமிறங்கினார். மெதுவாக ஆரம்பித்த ப்ரவீஸ், பின்னர் தனது “குட்டி டிவில்லியர்ஸ்” பட்டத்தை நிரூபிக்கும் விதமாக, 12வது ஓவரில் கமிண்டு மெண்டிஸின் பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கவைத்தார்.
சிஎஸ்கே ஸ்கோர் 11.4 ஓவரில் 100 ரன்களை கடந்தது. ஆனால் 13வது ஓவரில் ஹர்சல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற ப்ரவீஸ், பவுண்டரி லைனில் நின்று பாய்ந்து கேட்ச் பிடித்த மெண்டிஸால் வெளியேறினார். 25 பந்துகளில் 42 ரன்கள் (4 சிக்ஸர்கள், 1 பவுண்டரி) என்ற சிறந்த ஆட்டத்தை அவர் ஆடியிருந்தார்.
இந்த ஆட்டம் மூலம், சிஎஸ்கே அணிக்கு ஒரு நம்பிக்கையூட்டும் தொடக்கத்தை இளம் வீரர்கள் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.