அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது ரூ 30 லட்சம் பண மோசடி புகார்:- பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து புகார் தெரிவித்தார்:-
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் வரிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாலையன் (வயது 75). ஓய்வு பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளரான இவர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பரசலூரில் வசிக்கும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரெங்கநாதன் என்பவரின் வீட்டை கிரயம் செய்து கொள்வதற்காக அவரிடம் இரண்டு தவணையாக ரூ.30 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார். முன்பணம் கொடுத்ததை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவும் செய்து வைத்துள்ளார். ஆறு மாதங்களுக்குள் முன்னாள் எம்எல்ஏ ரெங்கநாதன் வீட்டினை கிரயம் செய்து தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில், காலக்கெடு முடிந்த பின்னரும் வீட்டை கிரயம் செய்து தராததோடு, முன்பணமாக பெற்ற பணத்தையும் திரும்ப தராமல் கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடித்துள்ளார். இது குறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில், காவல் நிலையத்துக்கு வந்த முன்னாள் எம்எல்ஏ ரெங்கநாதன் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பணத்தை திரும்ப தருவதாக கைப்பட எழுதிக் கொடுத்துள்ளார்.
ஆனால் அப்போதும் பணத்தை திருப்பி தராததால், பாதிக்கப்பட்ட பாலையன் இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து காவல் கண்காணிப்பாளர் சினேஹா ப்ரியாவிடம் புகார் மனு அளித்தார். வீடு விற்பதாக கூறி ரூ.30 லட்சம் பணத்தை மூன்று ஆண்டுகளாக ஏமாற்றி வரும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுத்து, தான் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.













