ஆவணி மூலப் பெருவிழாவில் ஆனந்தம் யூத் பவுண்டேஷன் நிறுவனர் செல்வகுமார் உள்ளிட்ட பலருக்கு தருமபுரம் ஆதீனம் விருதுகளை வழங்கி அருளாசி:-
ஆவணி மூல பெருவிழா மயிலாடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடத்தில் கடந்த மாதம் 31-ஆம் தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெற்றது. முக்கிய விழாவான இன்று விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு, சமூக சேவையில் சிறப்பாக செயல்பட்டமைக்காக ஆனந்தம் யூத் பவுண்டேஷன் நிறுவனர் செல்வகுமாருக்கு சமூக சேவை கலாநிதி என்ற பட்டத்தை வழங்கினார். தொடர்ந்து, தருமையாதீன அனைத்து உலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மாலை நேர கல்லூரிகளில் பயின்ற ஆசிரியர்களுக்கு சைவ சித்தாந்த புலவர் மற்றும் சைவ சித்தாந்த கலாநிதி ஆகிய பட்டங்களை வழங்கி அருள் ஆசி கூறினார். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற 500-க்கு மேற்பட்டோருக்கு தருமபுரம் ஆதீனம் இனிப்பு உள்ளிட்ட பலகாரங்களை வழங்கினார்.















