சென்னை : தமிழகத்தை உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. போக்சோ சிறப்பு நீதிமன்றம், தி.மு.க.வின் பிரமுகர் ஞானசேகரனை குற்றவாளி என அறிவித்துள்ளது. தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
“இந்த வழக்கில் ஐந்தே மாதத்தில் நீதியை பெற்றுத் தந்த காவல்துறைக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும், மாண்புமிகு நீதிமன்றத்துக்கும் நன்றி கூறுகிறேன். ‘குற்றம் நடக்கக் கூடாது ; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது’ என்பது என்னுடைய அடிப்படை நிலைப்பாடு. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே நமது கடமை” என தெரிவித்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
“ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திடீரென விடுதலை செய்யப்பட்டதும், பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டதும் சந்தேகம் எழுப்புகின்றன. அரசு மற்றும் அதன் மந்திரிகள் இந்த வழக்கில் ஏன் விசாரிக்கப்படவில்லை ? பாதி நீதியால் தப்பிக்க நினைப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டிய நேரம் வரும்” எனக் கடுமையாக விமர்சித்தார்.
முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை
“ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்தது வரவேற்கத்தக்கது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார்.
பா.ம.க. செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ்
“ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது வன்கொடுமைகளில் மேலும் பலர் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர்கள் யாரென்று கண்டறிந்து, தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என்றார்.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்
“அரசியல் பின்னணி கொண்டவர்கள் இருந்தாலும், நீதிமன்றம் தன் கடமையை செய்துள்ளது. இது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையும், துணிச்சலும் அளிக்கும் தீர்ப்பு” என பாராட்டினார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா
“இந்த வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும். இது எதிர்காலத்தில் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும்” எனக் கூறினார்.