எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘அங்கம்மாள்’ திரைப்படம், 2025-ம் ஆண்டுக்கான நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் என்ற பெருமை வாய்ந்த விருதை வென்றுள்ளது.
இந்த திரைப்படத்தை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்தில், கீதா கைலாசம், வட சென்னை, மெய்யழகன் படத்தில் நடித்த சரண் சக்தி, பரணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஓர் ஆளுமையான கிராமத்து தாயின் வாழ்க்கையையும், சமூக பார்வைகளை எதிர்த்து அவள் பாணியில் வாழும் துணிச்சலையும் படம் பிடித்து இருக்கிறது. குறிப்பாக, “தாயின் ஜாக்கெட் அணியாத பழக்கம்” குறித்த சமூக விவாதங்களை மையமாகக் கொண்டு, மனிதஉணர்வுகளுடன் கூடிய கதைக்களம் இந்த திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இது முன்பே மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டைப் பெற்றிருந்த நிலையில், நியூயார்க் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதும், மிகுந்த வரவேற்பு பெற்றது. பெருமாள் முருகனின் சிறுகதை முதன்முறையாக திரைப்படமாக உருவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனைக்கு திரைப்பார்வையாளர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.