அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது : ஐஸ்வர்யா ராய் வழக்கு

நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய அனுமதி இல்லாமல் தனது பெயர், புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது என்று கோரி, டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா ராயின் படங்களை பல நிறுவனங்களும், இணைய தளங்களும் தங்கள் தயாரிப்பு பொருட்களுக்கு விளம்பர நோக்கில் பயன்படுத்தி வருகின்றன. இதற்கு எந்த விதமான அனுமதியும் அவர் வழங்கவில்லை. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவரை ஒத்த முக உருவத்துடன் ஆபாச படங்கள், வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு ஆன்லைனில் பரவுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயல் அவரது தனியுரிமை மற்றும் விளம்பர உரிமையை மீறுவதாக இருப்பதால், இதை தடுக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ராய் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது வக்கீல் மனுவில், “எந்த நிறுவனத்திற்கும் அல்லது தனிநபருக்கும், அவரது பெயர் மற்றும் படங்களை வணிக ரீதியாக பயன்படுத்த உரிமை இல்லை. சிலர் அவருடைய புகழை தங்கள் தனிப்பட்ட நலனுக்காக, குறிப்பாக பாலியல் உச்சக்கட்ட விருப்பத்துக்காக தவறாக பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கில், ஐஸ்வர்யா ராய் படங்களுடன் கூடிய வால் பேப்பர்களை விற்பனை செய்யும் இணைய தளங்களும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வீடியோக்களை உருவாக்கிய யூடியூப் சேனல்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

வழக்கை விசாரித்த நீதிபதி தேஜஸ் கரியா, எதிர்மனுதாரர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று குறிப்பிட்டார். இந்த வழக்கு நவம்பர் 7-ம் தேதி இணைப்பதிவாளர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும், ஜனவரி 15-ம் தேதிக்குள் வழக்கு விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version