தர்மபுரம் ஆதீன மடாதிபதியிடம், வேளாண் துறை அமைச்சர் வினோத் நேரில் ஆசி பெற்றார், வேளாண் கல்லூரி அமைக்க இடம் அளித்தும் கடந்த அரசு அனுமதிக்கவில்லை, உடனடியாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அமைச்சர் இடம் மடாதிபதி கோரிக்கை :-
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழமையான சைவ ஆதீன திருமடத்திற்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று வருகை புரிந்தார். தொடர்ந்து ஆதின 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாரிடம் ஆசி பெற்றார். அவருக்கு ஆதீன மடம் சார்பில் கோயில் பிரசாதங்களும் நினைவு பரிசும் வழங்கப்பட்டன. தொடர்ந்து அமைச்சரிடம் பேசிய மடாதிபதி, விவசாயத்தை சார்ந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதீனம் சார்பில் வேளாண் கல்லூரி அமைக்க விண்ணப்பம் செய்தோம். இதற்காக காவிரி கரை ஓரம் 70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அரசு தங்கள் வேளாண் கல்லூரி கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. மேலும் மயிலாடுதுறை மாவட்டமாகியும் மருத்துவத்துறையில் அவசர சிகிச்சை பிரிவில் அதிநவீன சிகிச்சை பிரிவு மாவட்டத்தில் இல்லை. யாருக்கேனும் விபத்து ஏற்பட்டாலோ உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டாலோ சிதம்பரம் மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கிறார்கள், ஆகையால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கான இடத்தையும் அரசுக்கு இடம் கொடுப்பதாக மடாதிபதி அமைச்சரிடம் தெரிவித்தார். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்க பரிசீலனை மேற்கொள்ள வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.















