மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி பூசல். அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்யும் நிர்வாகிகள். உழைப்பிற்கு தகுந்த மரியாதை இல்லாததால் கட்சியில் இருந்து விடை பெறுவதாக அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜனார்த்தனன் அறிவிப்பு. 2016 தேர்தல் செலவுக்காக கடன் வாங்கி கொடுத்த 25 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பித் தராமல் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் ஏமாற்றியதாக பரபரப்பு குற்றச்சாட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். அதிமுக கட்சியில் பல்வேறு பதவிகளில் பொறுப்பு வகித்து வருபவர். செம்பனார்கோவில் ஒன்றியகுழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியவர். தற்போது அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வருபவர். இந்நிலையில் அதிமுக கட்சியில் உழைப்புக்கு தகுந்த மரியாதை இல்லாததால் கட்சி பொறுப்பில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களை தனது இல்லத்தில் சந்தித்த ஜனார்த்தனன் கூறுகையில் 1972ஆம் ஆண்டு முதல் கட்சிக்காக உழைத்து வருவதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு தன் உழைப்பை பாராட்டி தனக்கு எம்எல்ஏ சீட்டு கொடுக்க அழைத்த நிலையில் மன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் அதை கெடுத்து விட்டதாகவும், பல்வேறு காலகட்டங்களில் கட்சிக்காக தான் உழைத்ததாகவும், உழைப்புக்கு தகுந்த மரியாதை இல்லை என்று வேதனை தெரிவித்த ஜனார்த்தனன் கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஓ.எஸ். மணியனுக்கு 25 லட்சம் கடன் வாங்கி தந்ததாகவும் இதுவரை பணத்தை கொடுக்காததால் 1.20 கோடி வட்டியுடன் பணம் கொடுக்க வேண்டும் என்று, பணம் கொடுத்த நபர் இடத்தை விற்று பணம் கொடு என்று நெருக்கடி அளித்ததால் மன அழுத்தத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பகீர் குற்றசாட்டை முன் வைத்தார். தான் கட்சியை விட்டு விலகுவதற்கு முக்கிய காரணம் ஒ.எஸ்.மணியன், மாவட்ட செயலாளர் பவுன்ராஜ்தான் காரணம் என்றார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சியில் உரிய உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் அளிக்கவில்லை என்று கூறி அதிமுகவில் மாவட்ட அவைத்தலைவர் பாரதி, குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.கே செந்தில்நாதன் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் ஜனார்த்தனன் ராஜினாமா அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















