சென்னை:
“மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்பு சுவர்” எனும் சூழ்நிலையில் மத்திய அரசு, ஆளுநர் மற்றும் நிதி நெருக்கடிகளை தாண்டியும் தமிழ்நாடு அரசு சாதனைகள் படைத்துவருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் உரையாற்றிய அவர், “இது ஒரே ஒரு கட்சியின் அரசு அல்ல, ஒரு கொள்கையின் அரசு” என்றும் கூறினார். மேலும், மாநில உரிமைக்காக தனது பயணம் தொடரும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
முந்தைய ஆட்சி காலத்தில் தமிழ்நாடு பின்னடைந்த நிலையில் இருந்ததாக விமர்சித்த ஸ்டாலின், தற்போது மாநிலம் 9.6% பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக தமிழகத்தை முன்னெடுத்துவரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 15 மில்லியன் டாலர் அளவுக்கு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்வித் துறையில் இடைநிறுத்தல் இல்லாத வளர்ச்சி, உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47% அதிகரித்தது மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிறுத்தல் இல்லாமை போன்ற பல முன்னேற்றங்களை அவர் வலியுறுத்தினார்.
மருத்துவத் துறையில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களை கட்டுப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், இந்தியாவில் அதிக மருத்துவர்கள், மருத்துவ மாணவர் இடங்கள் தமிழகத்தில் இருப்பதையும் விளக்கியார்.
“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை” என்று கூறுபவர்களுக்கு, “இது மணிப்பூரோ காஷ்மீரோ அல்ல, தமிழ்நாடு” எனக் கடுமையாக பதிலளித்தார் ஸ்டாலின்.