சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கமலாமாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழாவின் துவக்கமாக இன்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் மண்ணுக்குரிய ஸ்தலமாக விளங்கும் இக்கோவில் சக்தி பீடங்களில் ஒன்பதாவது சக்தி பீடமாக உள்ளது. கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் கமலாம்பிகை அம்மனை முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனை பாடி வணங்கியுள்ளார். கமலாம்பிகை பெயரிலேயே இத்திருக்கோவிலின் திருக்குளமான கமலாலயம் அமைந்துள்ளது.
இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருவாரூர் தியாகராஜ சுவாமி கமலாம்பிகைக்கு ஆடிப்பூரத் திருவிழா 10 தினங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதன் துவக்கமாக இன்று காலை கோவில் வளாகத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புனித கடத்தில் நீர் வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மூலம் பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து பந்தல் கால் முன்பு மங்களப் பொருட்களை வைத்து பூஜை செய்து பந்தக்கால் நடப்பட்டது.
ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆடிப்பூரத்தன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.














