திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், பொதுமக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு அதிமுக சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் ஆர். விசுவநாதன் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி, நத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் இந்த முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது.
முகாமிற்கு அதிமுக ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி மருத்துவச் சேவையைத் தொடங்கி வைத்தார். இம்முகாமில், திண்டுக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவற்றின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் பொதுமக்களுக்குக் கண்புரை (Cataract), பார்வைக் குறைபாடு, கண் எரிச்சல், நீர் வடிதல் மற்றும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட பல்வேறு கண் தொடர்பான பாதிப்புகளுக்கு நவீன உபகரணங்கள் மூலம் பரிசோதனை செய்து முறையான ஆலோசனைகளை வழங்கினர்.
பரிசோதனையில் கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடுத்தகட்ட சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளையும் அதிமுக நிர்வாகிகளே முன்னின்று செய்தனர். இந்த முகாமில் நத்தம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கண்களைப் பரிசோதனை செய்துகொண்டனர். பயனாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், அதிமுக நகர அவைத் தலைவர் சேக்ஒலி உள்ளிட்ட ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலேயே இத்தகைய மருத்துவ முகாம் நடத்தப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.














