“காமராஜர் குறித்த சர்ச்சைக்குரிய விவாதங்கள் பொதுவெளியில் நடத்தப்படுவது சரியல்ல” என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையிலேயே கருத்துகள் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை பெரம்பூரில், முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில், திமுக எம்.பி. திருச்சி சிவா கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், காமராஜரை சுற்றியுள்ள சர்ச்சை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்கள்!” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காமராஜருடன் திராவிட இயக்கத் தலைவர்கள் கொண்டிருந்த உறவைக் குறிப்பிட்ட அவர்,
காமராஜரை ‘பச்சைத்தமிழர்’ என பெருமைப்படைத்தவர் தந்தை பெரியார்,
குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராஜருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா,
காமராஜர் மறைந்தபோது, ஒரே குடும்ப உறுப்பினராக இருந்து இறுதி மரியாதை செய்து, நினைவகம் கட்டி, பிறந்த நாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர் என நினைவுகூர்ந்தார்.
இத்துடன், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் நினைவில் வாழும் தலைவர்களின் மரியாதை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

















