கோவை :
கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த நான்கு இளைஞர்கள், காவல் துறையின் அதிரடி சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவை நோக்கி செல்லும் பாலக்காடு சாலையில் ஏராளமான உயர்கல்வி நிலையங்கள் இயங்கிவருகின்றன. கடந்த சில மாதங்களாக இந்த பகுதிகளில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டே கஞ்சா, பிரவுன் சர்கர் போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் முறை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், கோவை மாநகர காவல் துறையினர் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சுகுணாபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் சந்தேகத்துக்கிடமானவர்களுடன் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அப்பகுதிக்கு சென்ற போலீசார் சோதனை நடத்தியபோது, மைதானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் –
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (எலக்ட்ரீசியன்), ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மிருத்யுஞ்சயரனா, கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்த ஜான் பெட்டர், போத்தனூர் கணேசாபுரத்தைச் சேர்ந்த முத்து – அவர்கள் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இவர்களை கைது செய்த காவல் துறையினர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.