சென்னை : தமிழகத்தில் மக்கள் உரிமைகளை மீட்பதற்காக ஜூலை 25ம் தேதி தொடங்கி 100 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளப்படுவதாக பா.ம.க. செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு நல்லாட்சியை வழங்குவதற்குப் பதிலாக, நல்லாட்சி உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்த மட்டுமே முயற்சிக்கிறது. மக்கள் எல்லோரும் உரிமைகள் பெற்று மகிழ்ச்சியாக இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்படுவதில் அரசு ஈடுபட்டு வருகிறது,” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும், “தமிழக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற தனது கடமையை தவிர்த்துவருகிறது. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கால் ஆபத்தில் உள்ள 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் பணியிலும் தாமதம் செய்கிறது. சமூக நீதியை நிலைநாட்டும் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியத்தையும் திராவிட மாடல் அரசு புறக்கணிக்கிறது,” என்றார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அரசின் கவனக்குறைவையும், கல்வி ஒரு சேவையாக இல்லாமல் வர்த்தகமாக மாறிவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மது மற்றும் போதைப் பொருள்களின் பரவல் சமூகத்தில் பல்வேறு கேடுகளை உருவாக்குவதை அரசு கண்டு கொள்ளாமலிருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
“இந்நிலையில், பா.ம.க. சார்பில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் ஜூலை 25 முதல் தொடங்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பயணம் துவங்கும். இது ஒரு அரசியல் கட்சிக்கான பயணம் அல்ல; தமிழக மக்களின் நலனை நோக்கி நடத்தப்படும் ஒரு இயக்கம். எனவே, அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்று ஆதரிக்க வேண்டும்,” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.