அகமதாபாத் : குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் பயணமிடையில் விபத்துக்குள்ளாகியது. 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் புறப்பட்ட இந்த விமானம், மதியம் 1.38 மணியளவில் புறப்பட்டு, அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் தீப்பற்றியதும், கரும்புகை அடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், விமானம் விழுந்த இடத்தில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் 7 பேர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.
உயிரிழப்பு விவரம் :
அந்த மாணவர் விடுதியில் உயிரிழந்தவர்கள் –
5 இளநிலை மருத்துவ மாணவர்கள்
1 முதுகலை மாணவர்
1 மருத்துவரின் மனைவி
மேலும், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என அகில இந்திய மருத்துவ மாணவர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இருந்தும், விடுதியில் இருந்தவர்களில் மொத்தம் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இழப்பீடு – டாடா குழுமம் அறிவிப்பு :
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என ஏர் இந்தியாவின் பெற்றியாளரான டாடா குழுமம் அறிவித்துள்ளது.
டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் இதுகுறித்து கூறும்போது :
“இந்த சம்பவம் என் தொழில்நுட்ப வாழ்க்கையின் மிக மோசமான நாளாகும். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தோரின் மருத்துவச் செலவுகள் நாங்கள் ஏற்கிறோம். மேலும், சேதமடைந்த மருத்துவ மாணவர் விடுதி புதியதாக கட்டி வழங்கப்படும்.”
அதிகாரப்பூர்வ அறிக்கை:
டாடா குழுமம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பதாவது :
“இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். அவர்கள் பெற வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க எங்கள் முழு ஒத்துழைப்பும் இருக்கும். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.”
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அவசரகால மையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தகவல்கள் தொடர்ந்து பகிரப்படும் எனவும் டாடா குழுமம் தெரிவித்துள்ளது.