புதுடில்லி : கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்புத்துறையில் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், தன்னிறைவு நோக்கில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றவர் மோடி. இந்நிலையில், தனது மூன்றாவது ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில், மத்திய அரசின் சாதனைகள் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பதிவுகள் வெளியிட்டு வருகிறார்.
இன்று (ஜூன் 10) வெளியிட்டுள்ள ஒரு முக்கிய பதிவில், பிரதமர் மோடி கூறியிருப்பதாவது :
“கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்புத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வருவதிலும், தன்னிறைவை நோக்கமாகக் கொண்டு பல்வேறு முன்னேற்றங்களை நிகழ்த்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.”
மேலும், “இந்தியாவை வலிமையான நாடாக மாற்றும் நோக்கத்தில் மக்கள் ஒன்றிணைந்து செயலில் ஈடுபடுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவை முக்கிய மையப்புள்ளிகளாக விளங்கும் நிலையில், பிரதமரின் இந்தக் கருத்துகள் அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும், எதிர்கால பாதுகாப்பு நீட்சி திட்டங்களுக்கு அடிப்படை கட்டையாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் பாராட்டுகின்றனர்.