மாஸ்கோ : உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. இந்நிலையில், உக்ரைன் மீண்டும் ரஷ்யாவை அதிரவைக்கும் வகையில் கிரிமியா பாலத்தை தாக்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி, உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது என்பதற்காக, ரஷ்யா அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தி யுத்தத்தை ஆரம்பித்தது. அதிலிருந்து இந்நேரம் வரை இந்த போர் நிறைவடையவில்லை. தற்போது, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இரு நாடுகளிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தூண்டி வருகிறார். ஆனால் அதில் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், உக்ரைன் தற்போது ஒரு முக்கியமான ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவின் முக்கிய விமானத் தளங்களை இலக்காகக் கொண்டு “ஸ்பைடர்வெப்” என்ற ரகசிய செயல்பாட்டின் கீழ், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவற்றில் இர்குட்ஸ்க், முர்மான்ஸ்க், இவானோவோ, ரயசான் மற்றும் அமூர் ஆகிய ஐந்து விமானத் தளங்கள் உள்ளன. இதில், ரஷ்யாவின் முக்கிய ராணுவ விமானங்கள் — TU-95, TU-22M, A-50 உள்ளிட்ட 41 விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், உக்ரைன் பாதுகாப்பு அமைப்பான SBU, ரஷ்யாவுக்கும் கிரிமியாவுக்கும் இடையிலான கிரிமியா பாலம் மீது நீர்மட்டத்திற்குக் கீழே வைத்து வெடிபொருட்களால் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
“இந்த திட்டம் பல மாதங்களுக்கு முன்பே தயாரிக்கப்பட்டது. இன்று அதிகாலையில் 1,100 கிலோகிராம் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன. பாலத்தின் கீழ் உள்ள தூண்கள் சேதமடைந்தன,” எனக் கூறியுள்ள SBU, தாக்குதலின் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
இதனால், ரஷ்யா நேரப்படி அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரை பாலத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் வழக்கமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதன் காரணம் குறித்து ரஷ்யா தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் தரப்படவில்லை.
இதேவேளை, இந்த தாக்குதல் உக்ரைனின் ஆளில்லா விமானத்தால் நடத்தப்பட்டது என்றும், இது தோல்வியடைந்த தாக்குதலாகும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
கிரிமியா பாலம் (Kerch Bridge) என்பது 19 கிமீ நீளமுடையது. இது ரஷ்யாவுக்கும் கிரிமியாவுக்கும் இடையே நேரடி இணைப்பாக செயல்படுகிறது. 2014 இல் கிரிமியாவை உக்ரைனில் இருந்து கைப்பற்றிய பின்பு, ரஷ்யா இந்த பாலத்தை முக்கிய பங்களிப்பாகக் கட்டியமைத்தது. இது ஒரு தனிப்பட்ட சாலை மற்றும் ரயில் பாதையை கொண்டது.
இந்தப் பாலம், 2022 இல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் போது, ரஷ்ய படைகளுக்கு முக்கிய போக்குவரத்து வழியாக இருந்தது. கிரிமியா வழியாகவே ரஷ்யா, உக்ரைனின் தெற்கு கெர்சன் மற்றும் சபோரிஜியா பகுதிகளை கைப்பற்றியது.